ரிஷப் ஷெட்டியின் ஆதரவு படம் ; வழக்கு போட்டு தடுத்து பரபரப்பை கிளப்பிய ரம்யா

Published:

தமிழில் குத்து, பொல்லாதவன், சிங்கம்புலி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனாஸ் என்கிற ரம்யா. தொடர்ந்து சில வருடங்கள் நடிப்பில் கவனம் செலுத்தியவர் பின்னர் அரசியலில் குதித்து கர்நாடக மாநிலத்தில் மாண்டியா தொகுதியின் காங்கிரஸ் எம்பி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீப வருடங்களாக படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் இன்று கன்னடத்தில் வெளியாக இருக்கும் ‘ஹாஸ்டல் குடுகாரு பேக்ககிட்டரே’ என்கிற படத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து படம் வெளியாக தடை பெற்றுள்ளார்.

இதன் விவரம் என்னவென்றால் இந்த படக்குழுவினர் நடிகை ரம்யாவை வைத்து ஒரு பாடல் காட்சியை படமாக்கி உள்ளனர். தற்போது அந்த பாடல் காட்சியில் இருந்து ரம்யா இடம்பெற்றுள்ள சில காட்சிகளை சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக டிரைலர்களிலும் புரமோக்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ரம்யாவோ தனது அனுமதி இல்லாமல் இந்த பாடலை படக்குழுவினர் பயன்படுத்தி வருவதாகவும் இதனால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மேலும் தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை விதித்துள்ள நீதிமன்றம் ரம்யா குறிப்பிட்டபடி அவரது காட்சிகள் இடம் பெற்ற ட்ரெய்லர் மற்றும் புரோமோக்களை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் படத்தில் அவரது பாடலும் இடம்பெறக்கூடாது என்றும் உத்தரவிட்டது. அதுமட்டுமல்ல 50 லட்சம் ரூபாய் பிணைத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றும் கூறியுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த படத்தில் இருந்து முதல் புரமோ வெளியிடப்பட்ட போது அதில் ரம்யா நடித்த பாடலில் இருந்து சில காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன. அப்போது இதுகுறித்து ரம்யா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் தனது பாடல் படத்தில் முழுவதுமாக இடம் பெறும் என அவர் நினைத்திருந்த வேளையில் இந்த பாடல் வெறும் புரமோஷனுக்காக மட்டுமே படமாக்கப்பட்டது என்கிற தகவல் அவருக்கு தெரிய வந்ததால் தான் கோபமாகி இப்படி நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல இந்த பாடலுக்காக பணம் எதுவும் பெறாமல் அவர் நடித்து கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தை நடிகர் ரக்சித் ஷெட்டி வெளியிடுகிறார் என்பதும் இதில் ரிஷப் ஷெட்டி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இன்று இந்தப்படத்தின் ஆன்லைன் புக்கிங் திறக்கப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனையை படக்குழுவினர் ஏதோ ஒரு விதத்தில் சமாளித்து விட்டனர் என்றும் தெரிய வந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img