Home Blog Page 56

ராஜ்கமல் அலுவலகத்தில் கமல் – பாரதிராஜா திடீர் சந்திப்பு

0

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து எச்.வினோத், பா.ரஞ்சித் ஆகியோரின் டைரக்சனில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். இயக்குனர் பாரதிராஜா தற்போது குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். 16 வயதினிலே படத்திலிருந்து கிட்டத்தட்ட 40 வருடங்களாக இவர்கள் இருவரின் நட்பு தொடர்பு வருகிறது. குறிப்பாக கமலின் ஆரம்ப கால திரையுலக வாழ்க்கையில் பாலச்சந்தருக்கு அடுத்ததாக குறிப்பிடத்தக்க வெற்றி படங்களை கொடுத்தவர் பாரதிராஜா.

அந்த வகையில் இவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து சினிமா குறித்த புதிய விஷயங்களை பரிமாறிக் கொள்வது உண்டு. தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் பாரதிராஜா, கமல் இருவரும் சந்தித்து சமீபத்தில் உரையாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார் கமல்.

இந்த சந்திப்பு குறித்து அவர் கூறும்போது, “மூன்று வழக்குரைஞர்கள்.. ஒரு மணப்பெண். ‘சினிமா’. திரு பாரதிராஜாவும் நானும்.. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் என் முன்னே மூவியாலாவும் பின்னணியில் மறைந்த திரு ஆனந்து அவர்களும். இருவருமே சினிமா குறித்து எனக்கு நிறைய கற்பித்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

ரஜினி 170 : பட கதை, கேரக்டர் என்ன?

0

நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ஜாக்கி ஷெராப் , மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க போகிறார் ரஜினிகாந்த்.

இதற்கிடையே ரஜினியின் 170வது படத்தை ஞானவேல் இயக்குவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 2024ல் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த சில தகவல் கசிந்துள்ளது.

அதாவது ரஜினி 170 வது படமும் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை போன்று ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறதாம். இதில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ரஜினி, தூக்கு தண்டனைக்கு எதிராக போராடுபவராக நடிக்கிறாராம். தூக்கு தண்டனைக்கு எதிராக அவர் போராடுவது தான் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – விமர்சனம்

0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த ‘எந்திரன்’ படத்தையே ‘ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்’ என இன்றைய அப்டேட் செய்து கதாபாத்திரங்களை மாற்றி இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ஷா. அதற்கு நன்றி சொல்லத்தான் படத்திலேயே இயக்குனர் ஷங்கர் பெயரை சேர்த்திருப்பாரோ ?.

எவ்வளவு டெக்னாலஜி வளர்ந்தாலும், ‘காதல்’ என்பதை மட்டும் நமது இயக்குனர்கள் மறக்க மாட்டார்கள். எதையும் காதலுக்குள் கொண்டு வந்து கனெக்ட் செய்துவிடுகிறார்கள்.

கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆராய்ச்சியாளரான ஷரா, ‘ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்’ முறையில் ஒரு பெண்ணை வடிவமைத்து அதை ஒரு மொபைல் போனுடன் கனெக்ட் செய்கிறார். உருவம் இருந்தாலும் உடல் இல்லாத அந்தப் பெண்ணாக மேகா ஆகாஷ். ஷராவிடம் இருந்து அந்த போன் திருட்டுப் போய்விட, அந்த போனை வாங்குகிறார் சிவா. போனுக்குள் இருக்கும் மேகா பற்றி அவருக்குத் தெரிய வருகிறது. மேகாவின் உதவியால் உணவு டெலிவரி செய்து வந்த சிவா, வசதியானவராக மாறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக சிவாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் மேகா. ஆனால், சிவாவுக்கு அஞ்சு குரியன் மீது காதல். சிவா தன்னை உதாசீனப்படுத்தவதால் அவரைப் பழி வாங்க நினைக்கிறார். அது என்ன, அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘எந்திரன்’ படத்தில் ரோபோ மனிதனாக வந்த ரஜினிகாந்த், இந்தப் படத்தில் ‘ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்’ பெண் ‘ஸ்மார்ட்போன்’ சிம்ரன் ஆக மாற்றப்பட்டிருக்கிறார். ‘எந்திரன்’ பெரிய பட்ஜெட் படம், பெரிய அளவில் மிரட்டினார் ரோபோ. இது சிறிய பட்ஜெட் படம் அதனால், சிம்ரன் சின்னச் சின்னதாக மட்டும் மிரட்டுகிறார்.

சிவா நடிக்கும் படங்களில் ஒரு வரி, ஒரு வார்த்தை நகைச்சுவை அதிகமாக இருந்து சிரிக்க வைக்கும். இதிலும் அவ்வப்போது அப்படிப் பேசி சிரிக்க வைக்கிறார். ஆனால், இன்னும் அதிகமாக இறங்கி விளையாடக் கூடிய களம்தான். இயக்குனர் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.

படத்தின் முதன்மைக் கதாநாயகி என ‘ஸ்மார்ட்போன் சிம்ரன்’ ஆக நடித்திருக்கும் மேகா ஆகாஷைத்தான் சொல்ல வேண்டும். வெறும் ‘க்ரீன்மேட்’ ஷுட்டிங்கில் மட்டுமே அவர் நடித்திருக்க வேண்டும். இருந்தாலும் காதல் உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருக்கிறார். சிவாவின் காதலியாக அஞ்சு குரியன், அதிக வேலை இல்லை என்றாலும் அவ்வப்போது அழகாய் வந்து போகிறார்.

சிவாவின் அப்பாவாக பாடகர் மனோ, நண்பனாக மகாபா ஆனந்த். ஆராய்ச்சியாளராக ஷரா, அவருடைய திட்டத்திற்கு பைனான்ஸ் செய்பவராக பக்ஸ்.

இடைவேளை வரை படம் போரடிக்காமல் சுவாரசியமாக நகர்கிறது. அதற்குப் பிறகு மேகா ஆகாஷ் ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால், போன்கால்களை பிளாக் செய்வது, மெசேஜ்களை மாற்றி மாற்றி அனுப்புவது என்று மட்டும் விளையாடியிருக்கிறார். பட்ஜெட் பிரச்சினையால் இப்படி சுமாராக யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது.

இன்றைய டிரெண்டிங் கதையை யோசித்தவர்கள், திரைக்கதையில் அப்டேட் செய்து கொண்டிருக்கலாம்.

இசை, ஒளிப்பதிவு எல்லாம் சுமார் ரகம்தான். கூடுதலாக பணத்தை செலவழித்து இன்னும் பிரம்மாண்டமாக எடுத்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கலாம்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் – போன் புதுசு, மேட்டர் பழசு

பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் வெப் சீரிஸ்: ஏப்ரல் 28ல் வெளியாகிறது

0

பிரியங்கா சோப்ரா நடித்து வரும் பிரமாண்ட ஹாலிவுட் வெப் சீரீஸ் ‘சிட்டாடல்’. அதிரடி ஆக்ஷன் தொடரான இது வருகிற ஏப்ரல் 28ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. முதல் நாள் இரண்டு எபிசோட்களும், அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தலா ஒரு எபிசோடும் வெளியாகிறது. இதில் ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

8 ஆண்டுகளுக்கு முன்பு, நிழல் உலகை ஆண்டுக்கொண்டிருந்த வலிமை மிக்க அதிகாரக் குழுவான மாண்டிகோர் சிட்டாடல் எனும் உலக புகழ்பெபற்ற உளவு நிறுவனத்தை அழித்து விடுகிறது. சிட்டாடல் உயர்நிலை உளவுத் துறை அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் (பிரியங்கா சோப்ரா) இருவரும் மயிரிழையில் உயிர் தப்பினாலும் கடந்த கால நினைவுகள் முற்றிலுமாகத் அவர்களுக்கு மறந்து விடுகிறது. தங்கள் கடந்த காலத்தை பற்றி எதுவும் அறியாதவர்களாக, புதிய அடையாளங்களோடு ஒரு புதிய வாழ்கை வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த நேரத்தில் ஒரு நாள் இரவு அவர்களின் கடந்த காலம் பற்றி தெரிய வருகிறது. தங்களை அழித்தவர்களை அழிக்க புறப்படுகிறார்கள். இந்த முறை அவர்கள் வென்றார்களா என்பதுதான் தொடரின் கதை. இந்த தொடர் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதில் பிரியங்கா சோப்ரா நடிக்கும் கேரக்டரில் சமந்தா நடித்து வருகிறார்.

கங்குலி படத்தில் நான் நடிக்கவில்லை: ரன்பீர் கபூர் மறுப்பு

0

முன்னாள் கிரிக் கெட் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக தயாராக இருக்கிறது. இதில் கங்குலி வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் ரன்பீர் கபூரும், கங்குலியும் சந்தித்து பேசியதை தொடர்ந்து இந்த தகவல் வெளியானது. இதனை ரன்பீர் கபூர் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

கங்குலி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட் லெஜண்ட். அவரது வாழ்க்கை சினிமாவாவது ஒரு சினிமா கலைஞனாக எனக்கு மகிழ்ச்சி. ஆனால் துரதிர்ஷ்டவசமான நான் அதில் நடிக்கவில்லை. எனக்கு இயக்குனர்கள் காதல் கதைகளைத்தான் எழுதி வருகிறார்கள். எனக் கும் காதல் கதைகள்தான் செட்டாகும். என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே தோனி, சச்சின், மிதாலிராஜ் ஆகியோரின் வாழ்க்கையும், இந்தியா கபில்தேவ் தலைமையில் உலக கோப்பைபை வென்றதை பின்னணியாக கொண்டாடும் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அடுத்து கங்குலி வாழ்க்கை சினிமாவாவது உறுதி என்றாலும் அதில் நடிப்பது யார்? என்ற கேள்வி தொடர்கிறது.

லியோ படத்தில் விஜய் 50 வயது கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உட்பட பலர் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய் 50 வயது மதிக்கத்தக்க ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே வெளியான செய்தி தற்போது உறுதியாகி இருக்கிறது.

அதாவது இந்த படத்தில் விஜய்- திரிஷா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடிக்கும் நிலையில், அவர்களின் 15 வயது மகளாக பிக்பாஸ் சீசன்- 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் பெண்ணான ஜனனி நடிக்கிறார்.

இது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. காஷ்மீரை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில், அப்போது விஜய்-திரிஷாவுடன் இணைந்து ஜனனி நடிக்க இருக்கிறார்.

 

ஜெயம் ரவியின் அகிலன் பட சிங்கிள் பாடல் வெளியானது

0

பூலோகம் படத்தை அடுத்து மீண்டும் கல்யாண் இயக்கத்தில் அகிலன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்த படத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். துறைமுகம் பின்னணியில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. இப்படம் வருகிற மார்ச் 10 ஆம் திகதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அகிலன் படத்தின் பிரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொறக்கும் போதும் துரோகம் பண்ணு, இறக்கும் போதும் துரோகம் பண்ணு என்ற ஒரு சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் முழுக்க ஜெயம் ரவியின் ஆக்சன் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன. சோசியல் மீடியாவில் வைரலாகின இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி இருக்கிறார்.

 

திரையுலகில் 26 ஆண்டுகளைக் கடந்த யுவன்

0

இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. அவரது இரண்டாவது மகனான யுவன்ஷங்கர் ராஜா, தனது 16வது வயதில் ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படம் வெளிவந்து நேற்றுடன் 26 ஆண்டுகள் ஆகியுள்ளது.

தான் இசையமைப்பாளரானதற்கு ஏஆர் ரஹ்மானும் ஒரு காரணம் என யுவன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான் புதிய ஒலியமைப்பு, வித்தியாசமான இசை என தனது ஆரம்ப கால கட்டங்களில் புதிய அலையை ஏற்படுத்தினார். அவர் வந்த பின் இளையராஜாவின் இசையுடனான ஒப்பீடு அதிகமாக ஆரம்பித்தது. அந்த சமயத்தில் தனது அப்பாவின் பெருமையும், மதிப்பும் எந்த விதத்திலும் குறைந்து விடக் கூடாது என இசையமைப்பாளராக ஆனதாக அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

26 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் யுவன்ஷங்கர் ராஜாவின் இசை மிகவும் இளமையாக இருக்கிறது என இன்றைய இளைஞர்களும் தெரிவிக்கிறார்கள். எப்போதும் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் யுவனின் இசையில் பல மறக்க முடியாத பாடல்கள் வெளிவந்துள்ளன. யுவன், நா முத்துக்குமார் கூட்டணி தமிழ் சினிமாவில் சில வருடங்கள் ஆட்சி செய்து வந்ததை ரசிகர்கள் இப்போதும் நினைவு கூறுவார்கள்.

எவ்வளவோ முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தாலும் இன்னமும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படங்களுக்கு யுவன் இசையமைக்கவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தமே. விஜய் நடித்த ஒரே ஒரு படத்திற்குத்தான் யுவன் இசையமைத்திருந்தார். ஷங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் கூட யுவனுக்கு வாய்ப்பு தர மறுத்தாலும் யுவன் எதைப் பற்றியும் சிந்திக்காமல் இன்றைய இளம் இயக்குனர்களுடனும் இணைந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார். அதற்குக் கடந்தாண்டு வெளிவந்த ‘லவ் டுடே’ படம் மிகப் பெரும் உதாரணம்.

இசை வாரிசு ஆக சினிமாவுக்குள் வந்தாலும் தனி ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் இந்த யுவ(ன்) ராஜா.

50வது நாளில் ‘வாரிசு, துணிவு’

0

இந்தாண்டு பொங்கலுக்கு வாரிசு, துணிவு படங்கள் வெளியாகி வரவேற்பையும், வசூலையும் பெற்றன. இரண்டு படங்களும் இந்தாண்டின் 50 நாட்களை கடந்த படமாக அமைந்துள்ளது.

தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் மற்றும் பலர் நடித்து இந்த வருட பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் திகதி வெளிவந்த படம் ‘வாரிசு’. இப்படம் 300 கோடி வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கடந்த வாரம் ‘வாரிசு’ படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. ஓடிடியில் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையிலும் படம் சென்னை, கோவை ஆகிய ஊர்களில் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளிவந்து இன்றுடன் 50 நாட்கள் ஆகிறது.

இப்படத்துடன் வெளிவந்த அஜித் நடித்த ‘துணிவு’ படம் இருபது நாட்களுக்கு முன்பே ஓடிடி தளத்தில் வெளியானது. இருப்பினும் ‘துணிவு’ திரைப்படம் இன்னும் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பெங்களூரு ஆகிய ஊர்களில் சில தியேட்டர்களில் 50வது நாளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய் ‘வாரிசு’ படத்திற்குப் பிறகு தன்னுடைய அடுத்த படமான ‘லியோ’ படத்தில் நடிக்கப் போய்விட்டார். அப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது.