Home Blog Page 52

கொலை – விமர்சனம்

0

படத்தின் தலைப்பே இது என்ன மாதிரியான படம் என்பதை புரிய வைக்கிறது. ஒரு கொலை, அந்தக் கொலை எதற்காக, யாரால் நடத்தப்பட்டது, அதைச் செய்தது யார் ? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘விடியும் முன்’ என்ற கிரைம் திரில்லர் கதையைக் கொடுத்த இயக்குனர் பாலாஜி கே குமார், மீண்டும் ஒரு கிரைம் திரில்லர் படமாக இந்த ‘கொலை’ படத்தைக் கொடுத்திருக்கிறார். படத்தின் உருவாக்கம், அரங்க அமைப்பு, காட்சிகளின் கோணம், விசாரணை, ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவை இந்தப் படத்தைப் பற்றிப் பேச வைக்கின்றன.

பிரபல மாடலான மீனாட்சி சவுத்ரி அவரது அபார்ட்டிமென்ட்டில் கொல்லப்படுகிறார். அந்த வழக்கு பற்றிய விசாரணையை போலீஸ் அதிகாரியான ரித்திகா சிங் நடத்த ஆரம்பிக்கிறார். உதவிக்காக முன்னாள் போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனியை அழைத்துக் கொள்கிறார். மீனாட்சியின் நண்பர் சித்தார்த்தா சங்கர், மாடல் போட்டோகிராபர் அர்ஜுன் சிதம்பரம், மாடல் ஏஜன்ட் முரளி சர்மா, மீனாட்சியின் மேனேஜர் என சொல்லிக் கொள்ளும் கிஷோர் குமார் ஆகியோர் சந்தேக வலையில் சிக்குகிறார்கள். இவர்களில் யாராவது மீனாட்சியைக் கொன்றார்களா அல்லது வேறு யாரும் கொன்றார்களா என்பதை விஜய் ஆண்டனி, ரித்திகா எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மனைவியைப் பிரிந்தும், கல்லூரி செல்லும் வயதுடைய மகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும் விஜய் ஆண்டனி இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். நடுத்தர வயது தோற்றம் என விஜய் ஆண்டனியிடம் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ஆனாலும், முந்தைய படங்களில் பார்த்ததைப் போலவே, அதே உடல் மொழியுடனும், பேச்சுடனும் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்திற்குப் படம் கதாபாத்திரத்திற்கேற்றபடி கொஞ்சம் மாற்றி நடித்தால் அவருக்கு நல்லது. இந்தப் படத்தில் தோற்றத்தில் மாறிவிட்டார், நடிப்பிலும் இனி மாறுவார் என எதிர்பார்க்கலாம்.

மேலதிகாரியான ஜான் விஜய்யின் எதிர்ப்பையும் மீறி விஜய் ஆண்டனியை தனக்கு உதவி செய்ய வருமாறு அழைத்து சேர்த்துக் கொள்கிறார் ரித்திகா சிங். நிதானமாகவும், அக்கறையாகவும், எந்த அலட்டலும் இல்லாமல் தன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைக்கிறார் ரித்திகா.

மற்ற கதாபாத்திரங்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கிரைம் திரில்லர் படங்கள் என்றாலே ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை சைக்கோவாகக் காட்டுவது ‘க்ளிஷே’வாக உள்ளது. கொல்லப்படும் மாடலாக அறிமுக நடிகை மீனாட்சி சவுத்ரி. மாடல் என்று சரியாக நம்பும் அளவிற்கு நல்ல தேர்வு. அறிமுகப் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார். மீனாட்சியின் நண்பர் சித்தார்த்தா சங்கர், மாடல் போட்டோகிராபர் அர்ஜுன் சிதம்பரம், மாடல் ஏஜன்ட் முரளி சர்மா, மீனாட்சியின் மேனேஜர் என சொல்லிக் கொள்ளும் கிஷோர் குமார் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் தங்களை சரியாகப் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். ராதிகா சரத்குமார் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.

படத்தின் இயக்குனர் பாலாஜி கே குமார் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர் என்பதால் ஹாலிவுட் படங்களுக்குரிய ஸ்டைலை தமிழிலும் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். அவருடைய எண்ணத்திற்கு ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், எடிட்டர் ஆர்கே செல்வா சரியான ஒத்துழைப்பைத் தந்திருக்கிறார்கள். டெக்னிக்கலாக இந்தப் படம் பார்வையாளர்களிடம் பேசப்படும்.

ஆரம்பத்திலேயே நாம் குறிப்பிட்டபடி ‘உருவாக்கம்’ இந்தப் படத்தில் சிறப்பாக இருந்தாலும், உணர்வுபூர்வமாக நம் மனதைத் தொட மறுக்கிறது. கொல்லப்பட்டவர் மீது நமக்கு அனுதாபம் வந்தால்தான் அந்த உணர்வு கிடைக்கும். நடக்கும் விசாரணை சஸ்பென்ஸாகக் கடந்து போனாலும் ‘சம்திங் மிஸ்ஸிங்’ என்று தோன்றுகிறது.

கொலை – உணர்வை மிஞ்சும் கலை

வெளியானது சூர்யாவின் கங்குவா பட புரோமோ வீடியோ

0

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் ‘கங்குவா’. ஹிந்தி நடிகை திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார். சரித்திர காலத்து கதையில் இந்த படம் பிரமாண்டமாய் தயாராகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்தப் படத்தின் புரோமோ டீசரை வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர். இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கங்குவா’வின் உலகம் வீரம் மிக்கதாகவும் பார்வையாளர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தையும் தர உள்ளது. மனித உணர்வுகள், திறமையான நடிப்பு மற்றும் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய அளவிலான ஆக்ஷன் காட்சிகள் படத்தின் மையமாக இருக்கும்.

பிரமிக்க வைக்கும் காட்சிகள், காவியத்துவமான இசை, எல்லாவற்றையும் விட சூர்யாவின் சக்தி வாய்ந்த மற்றும் கவர்ச்சியான திரை இருப்பு கொண்ட 2 நிமிட புரோமோ டீஸர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பான்-இந்தியத் திரைப்படமான ‘கங்குவா’வின் உருவாக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு, பார்வையாளர்களுக்கு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் 3டியிலும் உருவாகி வருகிறது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.முன்னதாக கங்குவா படத்தின் ப்ரோமோ வீடியோ பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் சிவா: கங்கு என்றால் நெருப்பு. இதை தான் தலைப்பாக வைத்துள்ளோம். 1500 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை. கற்பனையாக வடிவமைக்கபட்டுள்து. இந்தக் கதை நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது. சரித்திர காலத்து பகுதி 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை போன்று உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் நிறைய போர்க்களக் காட்சிகள் உள்ளன. பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். குறிப்பாக மலைப் பகுதிகளில் படப்பிடிப்பு மேற்கொண்டது மிகவும் சிரமமாக இருந்தது. 3டியில் பத்து மொழிகளில் படம் வெளியாகிறது என்றார்.

 

நள்ளிரவில் வெளியாகும் கங்குவா படத்தின் முன்னோட்டம்

0

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றார்.

தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். திஷா பதானி, நட்ராஜ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சரித்திரம் கலந்த படமாக உருவாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்டமான கிளிம்ஸ் வீடியோ சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 23 ஆம் திகதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவித்தனர். தற்போது நள்ளிரவு 12.01 மணி நேரத்தில் இந்த கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டிலை தட்டி சென்றது யார் தெரியுமா?

0

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இந்த வாரம் நடைபெற உள்ளது. போட்டி களத்தில் இருக்கும் போட்டியாளர்களின் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து சில தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதாவது, மைம் கோபி அவர்கள் டைட்டிலை வெல்ல சிருஷ்டி டாங்கே இரண்டாவது இடத்தை பிடித்து இருப்பதாகவும் விசித்ரா மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.‌

எந்த அளவுக்கு உண்மை என்பது நாளைய எபிசோட்டில் தெரிந்து விடும்.

 

 

சத்திய சோதனை – விமர்சனம்

0

தமிழகத்தில் ஒரு கிராமத்துக் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு விசாரணை எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்தப் படம். 2017ல் வெளிவந்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள படம். அந்தப் படத்தில் ஒரு விபத்து மரணத்தால் நடக்கும் பிரச்சினைகளைச் சுற்றி திரைக்கதை நகரும். இந்தப் படத்தில் ஒரு கொலையால் நடக்கும் பிரச்சினைகளைச் சுற்றியே திரைக்கதை நகர்கிறது. முதல் படத்தைப் போலவே இந்தப் படத்தையும் கிராமத்துப் பின்னணியில் யதார்த்த கதாபாத்திரங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள சங்குப்பட்டி என்ற கிராமத்து காவல் நிலைய எல்லையில் ஒரு கொலை நடக்கிறது. கொலை நடந்த இடம் வழியாகச் சென்ற கொலையானவரின் கழுத்தில் கிடந்த செயின், அவரது செல்போன் ஆகியவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார் பிரேம்ஜி. ஆனால், அவரை சந்தேகத்தின் பேரில் அங்கேயே உட்கார வைத்து விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். கொலையாளிகள் போலீஸ் ஸ்டேஷனில் சரண்டர் ஆகிறார்கள். இருந்தாலும் கொல்லப்பட்டவரின் கழுத்தில் கிடந்த அத்தனை நகைகளையும் எடுத்தது யார் என்ற விசாரணைதான் நடக்கிறது. அந்த நகைகளுக்காக சங்குப்பட்டி காவல் நிலையத்தினரும், பக்கத்து ஊர் காவல் நிலையத்தினரும் சண்டை போட ஆரம்பிக்கிறார்கள். நகைகளை எடுத்தது யார் என்பதை போலீசார் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு கிராமத்துக் காவல் நிலையம், ஒரு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், இரண்டு போலீசார், ஒரு பெண் போலீஸ், ஒரு இன்பார்மர், கொலையாளிகள், சந்தேகத்தில் கைதானவர், ஒரு பாட்டி ஆகியோரைச் சுற்றியே முழு திரைக்கதையும் நகர்கிறது. அந்த விசாரணையில் நடக்கும் விஷயங்களை நகைச்சுவை கலந்து, நாட்டு நடப்புக்களை கொஞ்சம் கிண்டலடித்து படத்தை கலகலப்பாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். இரண்டு மணி நேரமும் போரடிக்காமல் சென்றாலும் இதைவிட இன்னும் கூட சிறப்பாகக் கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் வருகிறது.

படத்தின் கதாநாயகர்கள் என இரண்டு போலீசாரை மட்டும்தான் சொல்ல வேண்டும். ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் சவுண்டு சர்வீஸ் கடை நடத்தும் கதாபாத்திரத்தில் நடித்த சித்தன் மோகன் அதில் ஒருவர், மற்றொருவர் செல்வமுருகன். கிராமத்துக் காவல் நிலையங்களில் வேலை பார்க்கும் போலீசார் இப்படித்தான் இருப்பார்கள் என்று இருவரும் அவர்களது நடிப்பால் நம்ப வைக்கிறார்கள். இருவரது சின்னச் சின்ன ‘டைமிங்’ வசனங்கள் அவ்வப்போது கைதட்டி ரசிக்கவும் வைக்கின்றன.

படத்தின் கதாநாயகி என்றால் அந்த பாட்டி தான். நிறைய படங்களில் அந்தப் பாட்டியைப் பார்த்திருக்கிறோம். அந்த லட்சுமி பாட்டியின் நக்கலும், நையாண்டித்தனமும், யதார்த்தமான பேச்சும் ரசிகர்களை நிச்சயம் கவரும். பாட்டிக்கு அடுத்து நீதிபதியாக நடித்திருக்கும் ஞானசம்பந்தம் பற்றி சொல்ல வேண்டும். போலீசார் ஒரு வழக்கை எப்படியெல்லாம் விசாரிக்கிறார்கள், யாரைக் கைது செய்து கொண்டு வருகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.

அப்பாவி போல தெரிந்தாலும் போலீசாரையே கொஞ்சம் கதிகலங்க வைக்கிறார் பிரேம்ஜி. போலீசார் எப்படிப்பட்டவர்கள் என அவர் பேசும் ஒரு வசனம் காவல்துறைக்குக் களங்கம். அவரது காதலியாக ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார் ஸ்வயம் சித்தா.

தீபன் சக்ரவர்த்தி பின்னணி இசை, ஆர்வி சரண் ஒளிப்பதிவு, வெங்கட் ராஜனின் படத் தொகுப்பு இயக்குனரின் யதார்த்தப் பதிவுக்குக் கை கொடுத்துள்ளது.

கதை என்று பார்த்தால் ஒரு அழுத்தமில்லாத கதை, ஆனால் திரைக்கதையில், வசனங்களில் ரசிர்களை ஈர்க்க முடியும் என அதில் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா. ஒரு ஹீரோவுக்காக மட்டுமே கதையமைத்து படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் தன்னுடைய கதைக்காக நடிகர்களைத் தேர்வு செய்து இப்படியும் கூட படத்தைக் கொடுக்கலாம் என்ற அவரது நம்பிக்கைக்கு பாராட்டுக்கள்.

சத்திய சோதனை – சத்துடன்…

படு மாஸான சந்தானம் படத்தின் DD Returns Trailer

0

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக கலக்கி வந்த சந்தானம், ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு, இனி காமெடி வேடங்களில் நடிக்கமாட்டேன் என அறிவித்தார். அதன்பின்னர் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் அவருக்கு ஆரம்பத்தில் ஒரு சில படங்கள் ஹிட் ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்தித்து வருகின்றன.

சந்தானத்தின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் தில்லுக்கு துட்டு திரைப்படம் தான். இதன் முதல் பாகம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதற்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

தற்போது தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வருவதற்காக நடிகர் சந்தானம், தில்லுக்கு துட்டு படத்தின் 3-ம் பாகத்தில் நடித்திருக்கிறார். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்துள்ளார். மேலும் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

 

மாவீரன் திரைவிமர்சனம்

0

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இப்படி பல பல நட்சத்திரங்களின் மூலம் மாபெரும் எதிர்பார்ப்பை மாவீரன் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது.

அதுமட்டுமின்றி இப்படத்தில் தனது குரல் மூலமாக நடித்துள்ள விஜய் சேதுபதியும் இந்த எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம். இப்படி பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள மாவீரன் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
கதாநாயகன் சிவகார்த்திகேயன் {சத்யா} ஓவிய கதைகள் எழுதி வருகிறார். இந்த ஓவியத்தில் வரைந்து வரும் கதாபாத்திரம் தான் மாவீரன். அநீதியை எதிர்த்து, போராடி மக்களுக்கு நீதியை வழங்கி, மக்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுபவன் தான் இந்த மாவீரன்.

இப்படி தனது கதையில் மாவீரனை தைரியமான கதாபாத்திரமாக வடிவமைக்கும் சிவா, தனது நிஜ வாழ்க்கையில் மிகவும் பயந்த சுபாவத்துடன் எந்த பிரச்சனை தனக்கும் தனது குடும்பத்திற்கும் வந்தாலும், அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்டும் என சொல்லும் நபராக இருக்கிறார். இப்படி இருக்கும் கதாநாயகன் சிவாவை தேடி அரசியல் ரீதியான பிரச்சனை வருகிறது.

இந்த பிரச்சனையில் சிவகார்த்திகேயனுக்கு எமனாக என்ட்ரி கொடுக்கிறார் அமைச்சர் மிஷ்கின் {YM ஜெயக்கொடி}. சிவகார்த்திகேயனுக்கு மட்டுமின்றி அவரை சுற்றி இருக்கும் மக்களுக்கும் மிஷ்கினால் பெரும் ஆபத்து ஏற்படுகிறது.

இந்த பிரச்சையில் இருந்து தன்னை எப்படி சிவகார்த்திகேயன் பாதுகாத்துக் கொண்டார். மாவீரன் எப்படி சிவகார்த்திகேயனுக்கு உதவினார்? கதையில் வரும் மாவீரன் போல் நிஜ வாழ்க்கையில் மக்களுக்காக போராடினாரா சிவகார்த்திகேயன் என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்
சிவகார்த்திகேயன் மீண்டும் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் நிரூபித்துள்ளார். மாவீரனுக்கு முன் வெளிவந்த படம் ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை என பல விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்கள் அனைத்தையும் மாவீரன் படத்தின் மூலம் அடித்து நொறுக்கியுள்ளார். குறிப்பாக பயந்த சுபாவத்துடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் காட்சிகள் கைதட்டல்களை அள்ளுகிறது. மேலும் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார்.

மாவீரன் குரலாக வரும் விஜய் சேதுபதி திரைக்கதையின் ஓட்டத்திற்கு சிறப்பாக உதவியுள்ளார். வில்லன் மிஷ்கின் மிரட்டலான நடிப்பு. ஆனாலும் கூட இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். நடிகை சரிதாவின் அனுபவ நடிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ஷங்கர் தனக்கு கொடுத்த ரோலில் நன்றாக நடித்துள்ளார். ஆனால் காட்சிகள் கொஞ்சம் குறைவு தான்.

சுனில் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து விட்டது. மேலும் திரையரங்கில் உள்ள அனைவரையும் தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவையில் மூழ்கடித்து விட்டார் யோகி பாபு. சிவாவின் தங்கையாக நடித்துள்ள மோனிஷா தனக்கு கொடுப்பட்ட ரோலில் சிறப்பாக நடித்துள்ளார். மற்றபடி அனைவரும் அவரவர் வேலையை திரையில் சரியாக செய்துள்ளனர்.

இயக்குனர் மடோன் அஸ்வின் தனது திரைக்கதையின் மூலம் அசர வைத்துவிட்டார். சில இடங்களில் தொய்வு இருந்தாலும், அவை யாவும் குறை சொல்லும் அளவுக்கு இல்லை. அனைவரையும் எளிதில் கவரும் வகையில் மாவீரனை வடிவமைத்த விதம் சிறப்பு. மண்டேலா படத்திற்கு பின் மீண்டும் சிறப்பாக படைப்பை கொடுத்துள்ளார். ஆக்ஷன், நகைச்சுவை இருந்தாலும், தன்னுடைய அரசியல் சார்ந்த விஷயங்களை அழகாக படத்தில் எடுத்துக்காட்டியுள்ளார்.

ஒளிப்பதிவு படத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறது. எடிட்டிங் பக்கா. பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே.

நிறை

சிவகார்த்திகேயன் நடிப்பு

விஜய் சேதுபதி குரல், சரிதா, மிஸ்கின்

மடோன் அஸ்வின் திரைக்கதை

ஆக்ஷன் காட்சிகள்

மாவீரன் கதாபாத்திரம்

குறை

சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு

மொத்தத்தில் மாவீரன் மக்களுக்கான ஒருவன்..

மாமன்னன் – விமர்சனம்

0

தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவீஸ்
இயக்கம் – மாரி செல்வராஜ்
இசை – ஏஆர் ரகுமான்
நடிப்பு – வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின்
வெளியான தேதி – 29 ஜுன் 2023
நேரம் – 2 மணி நேரம் 27 நிமிடம்
ரேட்டிங் – 2.5/5

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சாதி கடந்த காதலை மையப்படுத்தியும், ‘கர்ணன்’ படத்தில் சாதி வேறுபாட்டை மையப்படுத்தியும் படமெடுத்த மாரி செல்வராஜ் இந்தப் படத்தில் சாதி அரசியலை மையப்படுத்தி இருக்கிறார். காலம் மாற மாற எல்லாமும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. அப்பா கை கட்டி நின்றால், மகன் அம்மாதிரி நிற்க மாட்டான் என்பதை அரசியல் கலந்து அழுத்தமாய் பதிய வைத்திருக்கிறார்.

சேலம் மாவட்டம் காசிபுரம் தனி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தைச் சேர்ந்த வடிவேலு. அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின், அடிமுறை சண்டையைக் கற்றுக் கொடுப்பவர். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஊரில் நடந்த ஒரு சாதி மோதலில் அப்பா வடிவேலு செய்தது பிடிக்காமல் அவருடன் பேசாமல் இருக்கிறார். அதே சமத்துவ சமூகநீதி மக்கள் கழகத்தின் சேலம் மாவட்டச் செயலாளராக இருக்கும் வேறு சாதியைச் சேர்ந்தவர் பகத் பாசில். அப்பா வடிவேலுவை அவர் நடத்திய விதம் கண்டு பொறுக்காமல் உதயநிதி எதிர்த்துப் பேச பகத் பாசிலுக்கும், உதயநிதிக்கும் கைகலப்பாகிறது. இந்த விவகாரத்தை தனிப்பட்ட விவகாரமாக எடுத்துக் கொள்ளும் பகத் கட்சியை விட்டு விலகி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கிறார். அடுத்து நடக்க உள்ள தேர்தலில் எதிரெதிர் மோதுகிறார்கள். இதில் யாருக்கு வெற்றி என்பதுதான் மீதிக் கதை.

அடுத்தவரை அடக்கி ஆளத் துடிக்கும் ஆதிக்கக் குணம் கொண்ட ஒரு அரசியல் வாரிசுக்கும், அடங்கிப் போக மாட்டேன், எதிர்த்து நிற்பேன் எனத் துடிக்கும் மற்றொரு அரசியல் வாரிசுக்கும் இடையில் நடக்கும் போட்டிதான் இந்த ‘மாமன்னன்’. சென்டிமென்ட் படமாக, காதல் படமாக இல்லாமல் அரசியல் படமாக மட்டுமே இப்படத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என மாரி செல்வராஜ் நினைத்திருக்கிறார். சேலம் மாவட்ட பின்னணி, கதைக்களம், சில பல குறியீடுகள் என இரண்டு சாதிகளுக்கிடையிலான மோதல் படமாகவும் துருத்திக் கொண்டு தெரிகிறது.

படத்தின் ‘மாமன்னன்’ டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலு தான் இந்தப் படத்தின் கதாநாயகன் என்றால் அது மிகையில்லை. முழு படத்தையும் அவருடைய தோளில், பேச்சில், நடவடிக்கையில் தாங்கி நிற்கிறார். அவருடைய பணிவு, அமைதி, கோபம், பாசம், அரசியல் என ஒவ்வொன்றுமே முந்தைய படங்களின் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை எந்த இடத்திலும் ஞாபகப்படுத்தவில்லை. மாமன்னன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் வேறு ஒரு தளத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வடிவேலு. அவருக்குள்ளும் இப்படி ஒரு நடிப்பு ஒளிந்திருக்கிறது என்பதை இத்தனை வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

அதிவீரன் என்ற கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின். ஆரம்பம் முதல் இடைவேளை வரை ஒரு இறுக்கமான முகத்துடனேயே நடித்திருக்கிறார். அந்த இறுக்கத்திற்கான காரணம் பிளாஷ்பேக்காக வந்தாலும் அதை நம் மனதில் இன்னும் உருக்கமாய் தைக்கும்படி இயக்குனர் சொல்லியிருக்கலாம். ஒரு பாடலின் மூலம் அந்த உருக்கத்தைக் கடந்ததற்குப் பதில் காட்சிகள் மூலம் நமக்குள் கடத்தியிருக்கலாம். அப்பாவுக்கான மரியாதையைப் பெற்றுத் தரத் துடிக்கும் கதாபாத்திரத்தில் உதயநிதியின் கோபம் ஆங்காங்கே வந்து ஒரு கட்டத்தில் ஆவேசமாய் மாறுகிறது. தன்னுடைய படங்களில் இது ஒரு முக்கியமான படம் என உதயநிதி உறுதியாக சொல்லிக் கொள்ளலாம்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஏழை மாணவர்களுக்காக மேற்படிப்பபுக்காக கோச்சிங் சென்டர் நடத்தும் லீலா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ். விதவித ஆடைகள், காதல் காட்சிகள் என இன்றைய கதாநாயகிகள் நடிக்க ஆசைப்படும் காலத்தில் இம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு துணிச்சல் வேண்டும். அது கீர்த்தி சுரேஷிடம் இருப்பது எதிர்பாராத ஆச்சரியம்தான். உரிமைக்குக் குரல் கொடுப்பவராக தன் குரலையும் பதிய வைத்துள்ளார் கீர்த்தி.

நாய் ரேஸில் தோற்றுப் போன தான் வளர்த்த நாயையே கொடூரமாகக் கொலை செய்யும் ஆரம்பக் காட்சியிலேயே பகத் பாசிலின் ரத்தினவேல் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதைப் புரிய வைக்கிறார் இயக்குனர். மாவட்ட அரசியலில் தன்னுடைய சாதியின் ஆதிக்கம், தனது ஆதிக்கம் தான் பெரிதாக இருக்க வேண்டும் என்ற குணம். அண்ணனாக இருந்தாலும் சரி, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி அனைவரையும் அடக்கி ஆளத் துடிக்கிறார். முதல்வரை சந்தித்தாலும் தனது பின்னணி என்பதைச் சொல்லிவிட்டு வேறு கட்சியில் சேருகிறார். தன் வீட்டில் தனக்குக் கீழாக நின்றவர் எப்போதுமே நிற்க வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர். அந்த ஒரு இடைவேளை காட்சியும் அதற்குப் பிறகான காட்சிகளும் பகத் பாசிலின் வில்லத்தனத்தை வரும் காலங்களிலும் பேச வைக்கும்.

ஸ்டைலிஷனான படங்கள், ஹை–பை படங்கள், பெரிய இயக்குனர்களின் படங்கள் என்று மட்டுமே பணியாற்றி வந்த ஏஆர் ரகுமான் இம்மாதிரியான படங்களுக்கு இசையமைத்துள்ளதும் ஆச்சரியம்தான். காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தை தனது பின்னணி இசையாலும், சிச்சுவேஷன் பாடல்களாலும் இன்னும் அதிகமாக்குகிறார். சேலம் கதைக்களம் தமிழ் சினிமாவில் அதிகம் இடம் பிடிக்காத ஒன்று. அந்த சுற்று வட்டாரங்களை கதையொட்டி பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி இவர்களைச் சுற்றி மட்டுமே மொத்த படமும் நகர்கிறது. வசனங்கள் மூலமும் சில காட்சிகள் மூலமும் சில பல அரசியலைக் குறியீடாக வைத்துள்ளார் இயக்குனர். இடைவேளைக்குப் பின்னர் தேர்தல் களம் மட்டும்தான் என்பதும், பகத், உதயநிதி இருவரிடையேயான போட்டி என்பதும் தொய்வை ஏற்படுத்தி விடுகிறது. இது போன்ற காட்சிகளை முன்னரே பல படங்களில் பார்த்துவிட்டதால் சுவாரசியம் குறைகிறது. கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியும் என்பதையும் யூகிக்க முடிகிறது. சாதி அரசியல், மோதல் தான் படமென்பதால் அரசியல் ஆர்வமுள்ளவர்களை இப்படம் அதிகம் ஈர்க்கலாம். திரைப்படமாகப் பார்த்தால், சராசரி, குடும்பத்து ரசிகர்களை ஈர்க்கும்படியான கதை படத்தில் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மாமன்னன் – உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

308 பெண்களுடன் உடலுறவு… – வெளியான ஷாக்கிங் தகவல்

0

லியோ படத்தில் வில்லனாக நடித்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், 308 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். கே.ஜி.எஃப் 2 படத்தில் நடிகர் யாஷுக்கு வில்லனாக அதீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற சஞ்சய் தத்திற்கு தற்போது தென்னிந்திய திரையுலகில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நடிகர் சஞ்சய் தத், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் சஞ்சய் தத்தின் கடந்த கால வாழ்க்கை பற்றிய ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. இவர் மும்பை குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் போதை பொருள் வழக்கு உள்ளிட்டவற்றில் சிக்கி இருந்தாலும், அதையெல்லாம் மிஞ்சும் விதமாக அமைந்தது தான் இவர் 308 பெண்களுடன் உடலுறவு கொண்ட விவகாரம். சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு என்கிற திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

அப்படத்தின் மூலம் தான் அவர் 308 பெண்களுடன் உடலுறவு கொண்ட விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. அதில் விபச்சாரிகளும் அடங்குவர் என்று சஞ்சய் தத் அந்த படத்தில் கூறி இருப்பார். உண்மையில் சஞ்சய் தத் எப்படி 308 பெண்களையும் சம்மதிக்க வைத்திருப்பார் என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கும். அந்த கேள்விக்கு சஞ்சய் தத்தின் வாழ்க்கை கதையை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ஒரு ஷாக்கிங் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதன்படி, சஞ்சய் தத் தான் டேட்டிங் செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் முதலில் ஒரு கல்லறைக்கு தான் அழைத்து செல்வாராம். அங்கு சென்றவுடன் என் அம்மாவை நீ சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் உன்னை இங்கு அழைத்து வந்தேன் என சொல்வாராம் சஞ்சய். அந்த சமயத்தில் அந்த பெண்கள் என்ன ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை அவர் நோட்டமிடுவாராம்.

சஞ்சய் தத் சொன்னதை கேட்டு மனமுருகிய பெண்களுடன் அவர் நெருக்கமாக பழகி டேட்டிங் செய்வாராம். இதில் ஹைலைட் என்னவென்றால் அவர் கூட்டிச் சென்று காட்டும் கல்லறை அவரது அம்மாவுடையதே இல்லையாம். இத்தகைய தில்லு முல்லு வேலையை செய்து தான் 308 பெண்களையும் அவர் மயக்கியதாக அப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் ராஜ்குமார் ஹிரானி கூறி இருந்தார்.

சஞ்சய் தத் ஒரு ரியல் லைஃப் மாமாகுட்டியாகவே வாழ்ந்து வந்துள்ளார். அவர் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருந்த போது அவரின் சமகால நடிகைகள் பெரும்பாலானோருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதுமட்டுமின்றி போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பால் மரணம்!

0

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமா தயாரிப்பாளர் என்எம்.பாதுஷா கசான் கான் உயிரிழப்பை உறுதிசெய்துள்ளார். சில நாட்கள் முன்பே இவர் உயிரிழந்துவிட்டார் என்றும், இப்போதுதான் அவரின் உயிரிழப்பு குறித்த தகவல் தெரியவந்ததுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. எனினும், அவரின் உயிரிழப்பு குறித்து கூடுதல் தகவல் ஏதும் இல்லை.

கேரளாவை பூர்வீகமாக கசான் கான், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். 1992ல் வெளிவந்த செந்தமிழ்பாட்டு என்ற படத்தின்மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள சினிமாவிலும் நடிகராக வலம்வந்தார்.

பெரும்பாலும் இவர் ஏற்றுநடித்த வேடங்கள், வில்லன் வேடம்தான். சேதுபதி ஐபிஎஸ், மேட்டுக்குடி, வானத்தைப் போல, வல்லரசு, முறைமாமன் என 1990களில் வெளிவந்த முக்கிய படங்களில் இவர் நடித்துள்ளார்.

1993ல் வெளியான கந்தர்வம் படத்தின் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமான இவர், வர்ணபகிட்டு, தி கிங், தி டான், மாயாமோகினி, ராஜாதிராஜா, மரியாதா ராமன், லைலா ஓ லைலா உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.

2003ல் மலையாளத்தில் வெளிவந்த ‘சிஐடி மூசா’ படத்தில் கசான் கான் வில்லனாக நடித்தது நல்ல வரவேற்பைப் பெற்றது. தென்னிந்திய திரையுலகில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய நடிகராக வலம்வந்த கசான் கான் கடைசியாக 2015ல் லைலா ஓ லைலா என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.